Chapter-101
நம்பிள்ளை மஹாவைபவமுடையவராய் வாழ்ந்து கொண்டிருந்தார். நஞ்சீயர் அவரோடு கூடவே தமது நூறவது வயது வரை எழுந்தருளி நம்பிள்ளைக் குறித்து சந்தோஷத்துடனிருந்தார். நஞ்சீயருக்கு அந்திம தசை நெருங்குகின்றது.
குட்டிக்குறியிளையாழ்வார் என்று நஞ்சீயரின் சீடரொருவர், நஞ்சீயரை பார்த்து, 'த்வயத்தை அநுஸந்திக்கலாகாதோ?” என்று வினவுகின்றார். அதற்கு சீயர், ” அது என், உனக்கு வேண்டாதே எனக்கு வேண்டுகிறதென்? நடையாடித் திரிபவருக்கு வேண்டாதே, கிடக்கைப்பட்டார்க்கு வேண்டியோ த்வயமிருப்பது?” என்றருளினாராம். (ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்போதுமே த்வயத்தினை அனுசந்தித்தவாறுயிருக்க வேண்டும்).
நஞ்சீயரின் உடல் நலம் நாளுக்கு நாள் மோசமாகியது. தெற்காழ்வார் பட்டர் எனும் சீடர் நஞ்சீயரிடத்து, 'உமக்குச் செய்ய வேண்டுவதென்?' என்று கேட்டார். சீயரும், ”நம்பெருமாள் ஸர்வஸ்வதானம் பண்ணி நான் அனுபவிக்க வேண்டுகின்றேன்”
(ஸர்வஸ்வதானம் என்றால் பெருமாளின் கவசம், வஸ்திரங்கள் என பெருமாளை மூடிமறைக்கும் அனைத்தும் நீங்கி, அவர் எவ்வாறு ஆவிர்பவித்தருளினாரோ அந்த ஸேவையினை ஸேவித்தல். தற்சமயம் நம்பெருமாள் ஜ்யேஷ்டாபிஷேகம் ஒரு நாள்தான் ஸர்வமும் களைந்து ஸேவை சாதிப்பார் - அதுவும் ஏழு திரை தாண்டி - அர்ச்சகாள் தவிர யாருமே ஸேவிக்க இயலாது)
தெற்காழ்வார்பட்டர் இதனைத் திருமாலைத் தந்த பெருமாள் எனும் நம்பெருமாளின் கைங்கர்யபரருக்குத் தெரிவிக்கின்றார். அவர் இதனை பெருமாளிடத்து விண்ணப்பம் செய்கின்றார். நம்பெருமாள் நஞ்சீயரின் திருமாளிகைக்கேத் தோளுக்குனியானில்
(தோளுக்கு இனியன் என்பது நம்பெருமாளின் பல்லக்குப்போன்றது. நம்பெருமாளை இந்த பல்லக்குகளில் எழுந்தருளப் பண்ணுபவர்களுக்கு 'ஸ்ரீமாந் தாங்குவோள்” என்று திருநாமம். என்ன அற்புதச் சொல் பாருங்கள்!) புறப்படுகின்றார்.
மடத்து வாசலிலே நம்பெருமாள் நிற்கின்றார். நஞ்சீயா; தள்ளாடிபடியே சீடர்களின் உதவியோடு நம்பெருமாளின் முன்னே வந்து ஸேவித்தப்படி நிற்கின்றார். நாற்புறமும் திரையிடப்பட்டு நம்பெருமாள், நஞ்சீயர், அர்ச்சகர் ஆகியோர் மட்டும் திரையினுள் இருக்கின்றனர்.
தமது மனைவிகள், புத்ரர்கள், தாம் வளர்ந்த க்ஷேத்திரம், சகோதரர்கள், பெருஞ்செல்வம், தம்முடைய தேசவாஸம் ஆகிய அனைத்தையும் துளிக்கூடக் கவலைப்படாமல் துறந்து ஆச்சார்யன் எழுந்தருளியிருந்த தேசமே பரமபாக்கியமென்று எழுந்தருளி, தம்
ஸர்வத்தையும் ஆச்சார்யன் திருவடிக்கே அர்ப்பணித்து,
ஸர்வத்தையும் துறந்த அந்த மஹனீயரின் ஒரே ஆசையினை நம்பெருமாள் நிறைவேற்றுகின்றார்.
நம்பெருமாள் சாற்றியிருந்த வஸ்திரங்கள் களையப்பட்டு,
தாம் தன் திருமேனியில் சாற்றியிருந்த ஸர்வத்தையும் துறக்கின்றார் அரங்கன். யாருக்குமே இதுவரை அளித்திராத 'ஸர்வஸ்வதான' ஸேவையினை அருளுகின்றார். கடைசியாக கண்களில் ஆனந்தநீர் பெருக்கெடுக்க ஆனந்தமாக அரங்கனை அனுபவிக்கின்றார்
நம்சீயர்!.
பரமபதத்திற்குத் தயாராகிவிட்டார் நஞ்சீயர்!. நம்பெருமாளும் சீயரின் அந்தரங்க ஆசையினை பூர்த்திசெய்த நிறைவோடு ஆஸ்தானம் திரும்புகின்றார். மஹாசந்துஷ்டியோடு நஞ்சீயர் அருளுகின்றார். 'பெருமாள் எனக்கு ஸர்வஸ்வதாநம் பண்ணியருளினார்.
நாம் உங்களுக்கு ஸர்வஸ்வதானம் பண்ணுவதற்குத் தயாராகயுள்ளேன். (இதில் பெருமாளின்
ஸர்வஸ்வதானம் - மறைவற திருமேனிக் காட்டுகை. நஞ்சீயர் அருளும் ஸர்வஸ்வதானம் - மறைவற சரமார்த்த ரகசியங்களை வெளியிடுகை) அபேக்ஷையுடையவர்கள் அபேக்ஷித்துக் கொள்ளுங்கோள் (வேண்டுபவர்கள் பெற்றுக் கொள்ளுங்கள்) என்றருளுகின்றார். அவரவர்கள் சந்தேகங்களை நிவர்த்திச் செய்கின்றார்.
கடைசியில் நம்பிள்ளையை பார்த்து, ”என்னுடைய சீடர் என்றோ 'லோகாச்சார்யா;' என்றோ இறுமாந்திராதே! எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்றருளுகின்றார். அங்குள்ள எல்லோரையும் அமுது செய்விக்க பண்ணுகின்றார். அனைவரும் அமுதுண்டபின்னர், தம் திருமாளிகையிலுள்ள கோயிலாழ்வார் நேரே பகவத்ஸேனாபதிசீயர் எனும் சீடர் மடியில் தலையை வைத்து, பின்பழகிய சீயர்
மடியிலே திருவடிகளுமாக வைத்து, கண்களை மூடி தம் ஆச்சார்யனான பட்டரின் திருவடிகளையே தியானித்துக் கொண்டு, திருநாடு அலங்கரித்தார்!.
நூறுரு திருவாய்மொழிக்கு அர்த்தமருளிச் செய்து
நிர்வஹித்தருளி சதாபிஷேகம் பண்ணப்பெற்ற தன்னேற்றமுடையவர், ஆச்சார்யன் கைங்கர்யமே உயிர்மூச்சாய், பட்டர் திருவடிகளே கதியென்றிருந்த
நஞ்சீயரின் உயிர் பிரிந்தது.
வேதாந்தியாகவும் பின்னர் நஞ்சீயராகவும், பட்டரின் பரமகிருபைக்கு ஆட்பட்ட அந்த ஆன்மா ஆச்சார்யனைத் தேடி பறந்தது!.. உடல் தனியானது. அரங்கன் சாற்றி களைந்த திருமாலை, திருப்பரிவட்டம் அனைத்தும் அந்த திருமேனிக்குச் சாற்றி கோயில் கொத்துக்கள் அனைவரும் வந்து ஸேவிக்க, நஞ்சீயரின் திருமேனி யதிசம்ஸ்கார விதியின்படி விசேஷமாய் திருப்பள்ளிப்படுத்தினார்கள். சீயருக்கு சீர்மையுடன் திருவத்யயநமும் நடத்தியருளினார்கள். நஞ்சீயர் இருக்கும் போதே தர்ஸனநிர்வாகம் நன்கு செய்தருளிய நம்பிள்ளை நஞ்சீயருக்குப் பின்னர் மேலும் அதிக சிரத்தையுடனே நிர்வாகம் செய்து வந்தார்.
-Posted on 27th August'2008-
For previous chapters of this article - please click here